முகப்பு
செய்திகள்

சனிப்பெயர்ச்சி 2025: பொதுப் பலன்கள்!

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்த சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்...

Updated On : 17 மார்ச், 2025 at 3:16 PM
சனிப்பெயர்ச்சி
பகிர்:

சனிப்பெயர்ச்சிக்கான பொதுப் பலன்களைத் தினமணியின் இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.

நவக்கிரகங்களில் கர்ம கிரகம் - தொழில் கிரகம் வாழ்வில் அனைத்து விதமான நல்ல விஷயங்களையும் அளிப்பவர் - சூரியனின் மகன் மந்தன் என்று அழைக்கப்படுகிறார். சனி பகவான்.

சனி கிரகம் மட்டுமே ஈஸ்வர பட்டம் ஒரே கிரகம். இவர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வித கர்மாக்களுக்கும் தலைவர். நம் வாழ்வில் முக்கியமான விஷயங்கள் - ஆயுள், தொழில், கர்மா. இம்மூன்றுக்கும் அதிபதி அதாவது காரகன் சனியாவார். ஒருவருடைய ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானாதிபதி பலம் குன்றியிருந்தாலும் சனீஸ்வர பகவான் பலமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று சொல்லலாம்.

Advertisement

சனி பகவானுக்குரிய ஆதிக்கம் பெற்ற விஷயங்கள்

உழைப்பு, சமூக நலம், தேசத் தொண்டு, புதையல், தலைமை தாங்கும் வாய்ப்பு, உலகியல் அறிவு, பல மொழிகளில் புலமை, விஞ்ஞானத்தில் தேர்ச்சி, எண்ணைக் கிணறு, பெரிய இயந்திரங்கள் போன்றவற்றிற்கு காரகத்துவம் கொடுப்பவர். கிரக வரிசையில் ஆறாவதாக வருபவர். கிழமைகளில் சனிக்கிழமைக்கு ஆதிக்கம் செலுத்துபவர். அளவின் அடிப்படையில் குருவிற்கு அடுத்த பெரிய கிரகம் சனி கிரகமாகும்.

சனியின் பலம்

குருவிற்குப் பார்வை பலமும், சனிக்கு ஸ்தான பலமும் சொல்லப்பட்டிருக்கிறது. சனி எந்த ஸ்தானத்தைப் பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் சிறிது காலத்திற்குப் பிறகு பலமும், விருத்தியும் அடைகிறது. சனிக்கு 3, 7, 10 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது சனி இருக்கும் இடத்திலிருந்து 3, 7, 10 ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். மூன்றாம் பார்வையும், பத்தாம் பார்வையும் சிறப்புப் பார்வைகளாகும்.

பொது பலன்கள்

குரு வீட்டிற்கு சனி மாறுவதால் சுப நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய தடை இருக்கும். திருமணம் சம்பந்தப்பட விஷயங்களில் தொய்வு ஏற்படும். ஆனால் பொருளாதார நிலைமை சீரடையும். அதிக அளவில் விரயங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமை எழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும். அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும்.

இடி மின்னல் அதிகம். இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும். தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். புராதன ஆலயங்கள் மற்றும் கட்டடங்களில் சேதமும் நஷ்டமும் உண்டாகும். அதே வேலையில் புராதன ஆலயங்களுக்கு அரசு கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும். மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசு உருவாக்கும். பல முக்கிய வழக்குகளுக்கு இந்த ஆண்டு எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும்.

சனிப்பெயர்ச்சி எப்போது?

திருக்கணிதப்படி 2025 - மார்ச் 29-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது. சுக்ல பிரதமையும் சனிக்கிழமையும் ரேவதி நட்சத்திரமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் இரவு 11:01-க்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார்.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026 மார்ச் 6-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது. சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

சனிபகவானுக்கு உரியப் பரிகாரத் தலமாகத் திகழும் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர், பிராணேஸ்வரி திருக்கோயிலில் வாக்கிய பஞ்சாங்கத்தின் படியே சனிப்பெயர்ச்சி கடைப்பிடிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.