திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம்!
சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பந்தக்கால் விழா..
திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு இன்று பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
காரைக்கால், திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தனி சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார்.
சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வரை வலம் வருவார். சிலவேளையில் ஒரு ராசியில் 3 ஆண்களும், இன்னொரு ராசியில் 2 ஆண்டுகளும் இருப்பார். மொத்தம் 12 ராசிகளையும் வலம்வர 30 ஆண்டுகள் எடுக்கும்.
Advertisement
Advertisement
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவில், நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சனீஸ்வர பகவானைத் தரிசனம் செய்வது வழக்கம்.
சனிப்பெயர்ச்சி விழா 2025 மார்ச் மாதம் நடப்பதாக பல்வேறு கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில், திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவில்லை.
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படியே சனிப்பெயர்ச்சி உள்ளிட்ட அனைத்து உற்சவங்கள், பூஜை முறைகள் நடைபெறுகிறது.
அதன்படி, 2026 மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. தமிழ் மாதப்படி (மாசி 22 ஆம் தேதி) அன்றைய தினம் காலை 8.24 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்க உள்ளார்.
அதற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது. முன்னதாக பந்தக் காலுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பின்னர், முக்கியஸ்தரகள் பந்தக் கால்களை சுமந்து ஆலய வலம் வந்து பந்தக்கால் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.
இதில் தருமபுர ஆதின கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்ட நாத தம்பிரான் சுவாமிகள், ஆலய நிர்வாகி சுப்பிரமணி உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Bandhakal Muhurtham was held today at the Sri Dharpparanyeswarar Swamy Temple in Thirunallar to mark the transit of Saturn.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.