திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்!
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர சுவாமி கோயில் பிரமோற்சவ திருத்தேரோட்டம் விழா பற்றி..
காரைக்கால் அடுத்த திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர சுவாமி கோயில் பிரமோற்சவ திருத்தேரோட்டம் விழா வெகு விமர்சையாக தொடங்கியது. 5 தேர்கள் ஒரே நேரத்தில் வந்த வீதியுலாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் உலகப் பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்சவ விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சுவாமி அம்பாள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா, தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை தர்பாரண்யேஸ்வரர் சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது. விழாவை ஒட்டி நேற்று செண்பக தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை தொடர்ந்து, செண்பக தியாகராஜ சுவாமி தேருக்கு எழுந்தருளினார். இதேபோல் மற்றொரு தேரில் நீலோத்பாலாம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் திருத்தேர்களில் எழுந்தருளினர். பின்னர் திருத்தேர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
Advertisement
Advertisement
தருமபுர ஆதீன கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், மற்றும் திருநள்ளாறு சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர், மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி, கோயில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருத்தேரை வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா தியாகேசா தியாகேசா என்று பக்தி பரவச முழக்கமிட்டு இழுத்துச் சென்றனர். ஒரே நேரத்தில் 5 திருத்தேர்கள் இழுப்பதால் அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள் ஆர்வத்துடன் ஒவ்வொரு தேர்களையும் இழுத்துச் சென்றனர்.
The grand Chariot Festival—part of the annual Brahmotsavam—commenced with great pomp and grandeur at the Darbaranyeswarar Swamy Temple in Thirunallar, near Karaikal.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.