லக்னௌ அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் நியமனம்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் இயக்குநராக இருந்த ஜாகீர் கான் லக்னௌ அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் இயக்குநராக ஜாகீர் கான் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார். 45 வயதாகும் ஜாகீர் கான் 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உடையவர்.
மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் தில்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக ஜாகீர் கானை நியமிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்த நிலையில் இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கௌதம் கம்பீர் ஆலோசகராக செயல்பட்ட இரண்டு ஆண்டுகளும் (2022 மற்றும் 2023) லக்னௌ அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கௌதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு அந்த அணி கோப்பையை வெல்ல உதவி புரிந்தார்.
அண்மையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்த இடத்துக்கு பெரிய வெற்றிடம் இருந்தது. தற்போது ஜாகீர் கான் இதனை நிரப்பவிருக்கிறார்.
கபில்தேவ்-க்குப் பிறகு இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளர்களில் வெற்றி பெற்ற ஒருவர் என்றால் அது ஜாகீர் கான். 2011 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்து கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளில் விளையாடி 102 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எகானமி 7.59 என்பது குறிப்பிடத்தக்கது.