கால் உடைந்தது கிரிக்கெட் விளையாடுவதை சிரமமாக்கியுள்ளது: மேக்ஸ்வெல்
கால் உடைந்தது கிரிக்கெட் விளையாடுவதை மிகவும் சிரமமாக்கியுள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
கால் உடைந்தது கிரிக்கெட் விளையாடுவதை மிகவும் சிரமமாக்கியுள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல்லுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன் காரணமாக கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான பார்டர் காவஸ்கர் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல் இடம்பெறவில்லை. ஆனால், இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல் இடம்பெற்று விளையாடினார்.
ஆஸ்திரேலிய அணி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், கால் உடைந்தது நீண்ட நேரம் களத்தில் நின்று கிரிக்கெட் விளையாடுவதை மிகவும் சிரமமாக்கியுள்ளதாக கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எனது கால் உடைந்தது இன்னும் சிரமத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதனை சரி செய்வதற்கான வேலை இன்னும் நடந்துகொண்டு இருக்கிறது. எனது காலை சரிசெய்வதற்காக நான் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. நீண்ட நேரம் கால் வலியின்றி கிரிக்கெட் விளையாடுவதற்கு அதிக உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கிறது. உடலின் மற்ற பாகங்களைக் காட்டிலும் கால் சரியாவதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது என்றார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேக்ஸ்வெல் கடைசியாக விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.