முகப்பு
கிரிக்கெட்

ரோஹித் சர்மாவின் கேப்டன்சி முடிவுக்கு வருகிறதா? சிட்னி டெஸ்ட்டில் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனா?

சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக வழிநடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 2 ஜனவரி, 2025 at 5:50 PM
ஜஸ்பிரித் பும்ரா - படம் | AP
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2025 at 5:21 PM

சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக வழிநடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை (ஜனவரி 3) தொடங்கவுள்ளது.

நாளை கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீதான விமர்சனங்களும், கேப்டன் ரோஹித் சர்மா மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ளன. ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டும் எனவும் அல்லது அவர் ஓய்வு பெற்று விடலாம் எனவும் ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்களும் நினைக்கும் வகையிலான சூழல் உருவாகியுள்ளது.

Advertisement

Updated On : 2 ஜனவரி, 2025 at 5:42 PM

பும்ரா அணியை வழிநடத்துகிறாரா?

ரோஹித் சர்மா மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக வழிநடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சிட்னியில் நடைபெறவுள்ள கடைசி டெஸ்ட் போட்டியில் சிறந்த பிளேயிங் லெவனுடன் களமிறங்குவதை கருத்தில் கொண்டு கேப்டன் ரோஹித் சர்மா, கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது இந்த முடிவை இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இருவரும் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

Updated On : 2 ஜனவரி, 2025 at 5:42 PM

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான இந்திய அணியின் வாய்ப்பு மங்கிவிட்ட நிலையில், ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் பயணமும் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரோஹித் சர்மா - படம் | AP

சிட்னியில் நடைபெறும் போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ரோஹித் சர்மா கடைசிப் போட்டியில் விளையாடாத பட்சத்தில், ஷுப்மன் கில் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது. கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க, கில் மூன்றாவது ஆட்டக்காரராக களமிறங்குவார் எனவும் கூறப்படுகிறது.

பந்துவீச்சை பொருத்தவரையில், கடைசி போட்டியிலிருந்து விலகியுள்ள ஆகாஷ் தீப்புக்குப் பதிலாக அணியில் பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜுடன் அவர் இணைவார்.

Updated On : 2 ஜனவரி, 2025 at 5:42 PM

பார்டர் - கவாஸ்கர் தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திய ஜஸ்பிரித் பும்ரா அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். சிட்னி டெஸ்ட் போட்டியில் அவர் மீண்டும் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தவுள்ளார் எனக் கூறப்படுகிறது.

சிட்னி டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடாத பட்சத்தில், மெல்போர்ன் டெஸ்ட் போட்டியே கேப்டனாக அவரது கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கலாம் எனவும், அதுவே அவரது கடைசி டெஸ்ட் போட்டியாகவும் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.