இறுதிப்போட்டி: பந்துவீச்சில் அசத்திய இந்தியா; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தனர். பாகிஸ்தான் அணி 84 ரன்களுக்கு அதன் முதல் விக்கெட்டினை இழந்தது. அதிரடியாக விளையாடிய ஷாகிப்ஸாதா ஃபர்ஹான் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 38 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன் பின், ஃபகர் ஸமான் மற்றும் சைம் ஆயுப் ஜோடி சேர்ந்தனர். சைம் ஆயுப் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஃபகர் ஸமான் 35 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்ஷர் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.