ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?
நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஃபார்மில் இல்லாத பேட்டர் ஒருவரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க இந்திய அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஃபார்மில் இல்லாத பேட்டர் ஒருவரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க இந்திய அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் அகமதாபாதில் நேற்று (பிப்ரவரி 22) நடைபெற்ற சூப்பர் 8 ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பைத் தொடர் வரலாற்றில் மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ள கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியின் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.
Advertisement
Advertisement
இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் வலுவாக இருக்கிறது. அப்படி இருந்தும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது அணியில் ஃபார்மில் இல்லாத வீரர்கள் மீதான விமர்சனங்களை அதிகப்படுத்தியது.
டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக அதிரடியாக விளையாடி எதிரணியை அலறவிட்ட அபிஷேக் சர்மா, நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 4 போட்டிகளில் விளையாடி வெறும் 15 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். முதல் மூன்று போட்டிகளில் டக் அவுட்டான நிலையில், நான்காவது போட்டியில் அவர் 15 ரன்கள் எடுத்தார்.
அதிரடியாக விளையாடக் கூடிய திலக் வர்மாவும் அதிக ரன்கள் குவிக்கத் தவறி வருகிறார். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 107 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 118 ஆக உள்ளது.
ஆட்டத்தை முடித்துக் கொடுக்கும் திறமை கொண்ட ரிங்கு சிங், நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் மிகவும் சராசரியான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார். இந்த தொடரில் 29 பந்துகளை எதிர்கொண்டுள்ள ரிங்கு சிங், வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 82.75 என கவலையளிக்கும் விதமாக உள்ளது.
இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான சிதான்ஷு கோட்டக், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும், அணி நிர்வாகமும் ஏதேனும் வித்தியாசமாக முயற்சிக்கலாம் என உணர்ந்தால், அதனை செய்ய நாங்களும் தயாராக இருக்கிறோம் எனக் கூறியிருக்கிறார். இதிலிருந்து, அடுத்தப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளரான ரியான் டென் டொஸ்சாட்டும், உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் சிறப்பாக விளையாடும் கூடுதல் பேட்டர்கள் இல்லை என்பதையும், சஞ்சு சாம்சனை மீண்டும் பிளேயிங் லெவன் காம்பினேஷனில் கொண்டு வரலாம் என்பதையும் தெரிவித்துள்ளார்.
பிளேயிங் லெவனில் மீண்டும் சஞ்சு சாம்சனை கொண்டு வருவது தொடர்பாக ரியான் டென் டொஸ்சாட் தெரிவித்திருப்பதாவது: கடந்த 18 மாதங்களாக சிறப்பாக விளையாடிய வீரர்களுடன் இந்திய அணி உலகக் கோப்பைத் தொடரில் களமிறங்கியுள்ளது. ஆனால், வீரர்கள் சிலர் ரன்கள் குவிக்கத் தவறுகிறார்கள். பிளேயிங் லெவனில் மாற்றமில்லாமல் களமிறங்க வேண்டுமா? அல்லது மாற்றம் செய்யப்பட வேண்டுமா? என்பது மிகவும் முக்கியமான விஷயமாக மாறியுள்ளது.
சஞ்சு சாம்சன் மிகவும் அற்புதமான வீரர். அவரை பிளேயிங் லெவனில் கொண்டுவர வேண்டுமா என்ற ஆலோசனையும் நடைபெற்று வருகிறது. அவர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றால், டாப் ஆர்டரில் வலதுகை, இடதுகை காம்பினேஷன் பிரச்னைக்கும் தீர்வு வரும். இந்திய அணி ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிராக மிக முக்கியமான போட்டிகளில் விளையாடவுள்ளதால், சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனில் சேர்க்கும் ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இடதுகை பேட்டர்களான அபிஷேக் சர்மா, திலக் வர்மா அல்லது ரிங்கு சிங் இவர்கள் மூவரில் ஒருவர் பிளேயிங் லெவனிலிருந்து நீக்கப்பட்டு, சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும், சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான அடுத்தப் போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக அணியின் துணைக் கேப்டன் அக்ஷர் படேல் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
The Indian team management is reportedly considering dropping an out-of-form batsman from the playing eleven for the ongoing T20 World Cup.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.