வங்கதேசத்துக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ஐசிசி மறுப்பு!
வங்கதேச அணி விளையாட இருந்த டி20 உலக கோப்பைக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ஐசிசி மறுத்துள்ளதைப் பற்றி...
இந்தியாவில் வங்கதேச அணி விளையாட இருந்த டி20 உலக கோப்பைக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ஐசிசி மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்ட பிறகு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த இடைக்கால ஆட்சியில் அங்கு சிறுபான்மையினராக வசிக்கும் ஹிந்துக்களைக் குறிவைத்து வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதனால், இந்தியா - வங்கதேசம் இடையிலான உறவுகள் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளன.
இருதரப்பிலும் தொடரும் போராட்டங்களுக்கு மத்தியில், வங்கதேச வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதியளிக்கக் கூடாது என பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இதன் தொடர்ச்சியாக கொல்கத்தா அணி (கே.கே.ஆர்.) ரூ. 9.20 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முஸ்தாஃபிசுர் ரஹ்மானை, அணியில் இருந்து நீக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியதால், அவர் அணியில் இருந்து ஜன. 3 ஆம் தேதி விடுவிக்கப்பட்டார்.
இதன் எதிரொலியாக ஐபிஎல் போட்டிகள் வங்கதேசத்தில் ஒளிபரப்ப அங்கு தடைவிதிக்கப்பட்டது. மேலும், இந்தியாவில் நடைபெறும் ஐசிசி டி20 போட்டியில் வங்கதேச அணி வீரர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும் எனக் கூறி, பாகிஸ்தான் அணியைப் போன்றே வங்கதேசத்துக்கான போட்டிகளையும் இலங்கைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடருக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்றக் கோரிய வங்கதேசத்தின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு தரப்புகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையின் போது இந்த முடிவு எட்டப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போட்டி நடைபெறும் திடல்கள், அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது.
இந்தியாவில் நடைபெறும் போட்டியில் வங்கதேச அணி விளையாடவில்லை என்றால் தகுதியிழப்புப் புள்ளிகளைப் பெற நேரிடலாம் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரபூர்வத் தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவிருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரின் 4 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் தில்லி, சென்னை, மும்பை உள்பட 5 இடங்களில் மொத்தமாக 55 போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், பிப்ரவரி 9 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் தங்களது முதல் போட்டியில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணியை வங்கதேச அணி எதிர்கொள்ளவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
The ICC has turned down Bangladesh's request to move T20 World Cup matches out of India.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.