மன அழுத்தத்துடன் போராட்டம்! கிரிக்கெட் விளையாடுவதை கைவிட நினைத்தேன்: ஸ்ரேயங்கா பாட்டீல்
மன அழுத்தத்துடன் போராடியதாகவும், கிரிக்கெட் விளையாடுவதை கைவிட நினைத்ததாகவும் இந்திய வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல் தெரிவித்துள்ளார்.
மன அழுத்தத்துடன் போராடியதாகவும், கிரிக்கெட் விளையாடுவதை கைவிட நினைத்ததாகவும் இந்திய வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல் தெரிவித்துள்ளார்.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் பிரிமிங்ஹமில் நேற்று (ஜூன் 14) நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளையும், ஸ்ரீ சரணி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். நேற்றையப் போட்டியில் மூன்று ஓவர்கள் வீசிய ஸ்ரேயங்கா பாட்டீல் 17 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
Advertisement
Advertisement
கடந்த 2024 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசியாக ஸ்ரேயங்கா பாட்டீல் விளையாடியிருந்தார். அதன் பின், கிட்டத்தட்ட 14 மாதங்கள் அவர் தேசிய அணியில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக விளையாடாமலிருந்த அவர், நடப்பாண்டு மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடினார்.
இந்த நிலையில், மன அழுத்தத்துடன் போராடியதாகவும், கிரிக்கெட் விளையாடுவதை கைவிட நினைத்ததாகவும் ஸ்ரேயங்கா பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஜியோஸ்டோரில் பேசியதாவது: காயம் காரணமாக நான் நீண்ட காலம் அணியில் இடம்பெறாமலிருந்தேன். இந்த காலக் கட்டத்தில் நான் மன அழுத்தத்தில் இல்லை என்று கூறினால், நான் பொய் கூறுகிறேன் என்றே அர்த்தம். நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். கிரிக்கெட் விளையாடுவதை கைவிட நினைத்தேன். அதன் பின், எனக்குள் இருந்த குரல் உனக்குப் பிடித்த கிரிக்கெட்டினை எந்த ஒரு காரணத்துக்காகவும் கைவிடக் கூடாது எனக் கூறியது. நான் இங்கு இருப்பதற்கு காரணம் எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும் என்ற ஒன்றே ஒன்றுதான். இந்த கடினமான காலக் கட்டத்தில் என்னுடைய குடும்பம் எனக்கு உறுதுணையாக இருந்தது என்றார்.