சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் கோப்பைக்கான போட்டியாளர் கிடையாது: முன்னாள் இந்திய வீரர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கான கடும் போட்டியாளர் கிடையாதென இந்திய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கான கடும் போட்டியாளர் கிடையாதென இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடுமையான போட்டியாளர் கிடையாதென ராபில் உத்தப்பா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் ஜியோஹாட்ஸ்டாரில் பேசியதாவது: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடியான பேட்டிங்கை பார்ப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், அப்படி அதிரடியாக பேட்டிங் செய்வது மட்டுமே கோப்பையை வெல்ல உதவாது. அந்த அணி பந்துவீச்சில் வலுவாக இல்லை. பந்துவீச்சாளர்களே கோப்பையை வென்று கொடுப்பவர்கள்.
சன்ரைசர்ஸ் அணி ஹைதராபாதில் 7 போட்டிகளில் விளையாடுகிறது. ஹைதராபாத் ஆடுகளத்தை பேட்டர்களின் சொர்க்கம் என்றே கூறலாம். முகமது ஷமி போன்ற மூத்த பந்துவீச்சாளர்களே அந்த ஆடுகளத்தில் சிறப்பாக பந்துவீச தவறுவார்கள். அந்த மாதிரியான ஆடுகளத்துக்கு புவனேஷ்வர் குமார் போன்ற பந்துவீச்சாளர் தேவை. அவர் பந்தை ஸ்விங் செய்வார், வேகத்தை மாற்றுவார் மற்றும் தேவையான நேரத்தில் துல்லியமாக யார்க்கர் பந்துகளை வீசுவார். அதனால், பேட்டிங்கில் அதிரடியாக விளையாடினாலும், பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் தடுமாறும்.
கடந்த சீசனில் என்ன நடந்தது என்பதை பார்த்தோம். அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் மற்றும் கிளாசனை தவிர்த்து மற்ற பேட்டர்கள் பெரிதாக விளையாடவில்லை. அதனால், டாப் ஆர்டர் சொதப்பும் பட்சத்தில், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களால் சிறிய இலக்கை நோக்கி விளையாடும் எதிரணியை கட்டுப்படுத்த முடியாது. அதனால், ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை கடும் போட்டியாளராக நான் கருதமாட்டேன் என்றார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாதில் ஷிவம் மாவி, ஜெயதேவ் உனத்கட், ஈஷன் மலிங்கா, ஹர்ஷல் படேல் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி வேகப் பந்துவீச்சு தெரிவுகளாகவும், ஹர்ஷ் துபே மற்றும் ஸீசன் அன்சாரி சுழற்பந்துவீச்சு தெரிவுகளாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.