கேப்டன் பொறுப்பிலிருந்து விலக ஒருபோதும் நினைக்கவில்லை: அஜிங்க்யா ரஹானே
கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் வந்ததில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.
கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் வந்ததில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்தன. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றதால், அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் வெளியேறின.
நடப்பு ஐபிஎல் தொடரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நன்றாக தொடங்கவில்லை. இருப்பினும், தொடரின் பிற்பகுதியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நீடித்தது. இருப்பினும், மும்பைக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது கொல்கத்தாவின் பிளே ஆஃப் கனவை கலைத்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் வந்ததில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கிரிக்கெட்டினை நல்ல விதமாக நான் எப்போதும் நேசித்து விளையாடுகிறேன். வீரர் ஒருவரின் குணம் எப்போதும் மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பேன். உங்களுடைய அணி தடுமாறும்போது, உங்களுக்குள் இருக்கும் சிறப்பான குணத்தை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம். போட்டிகளின்போது கண்டிப்பாக அழுத்தம் இருந்தது உண்மைதான். ஆனால், அழுத்தம் இருப்பது இயல்பே. எல்லோராலும் அழுத்தத்தைக் கையாள முடியாது. என்னைப் பொருத்தவரை, என்ன நடந்தாலும் பதற்றமடையாமல் மன உறுதியுடன் இருப்பது முக்கியம். கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் எண்ணம் எனக்கு ஒருபோதும் வரவில்லை என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 6 போட்டிகளில் 5 தோல்விகளைத் தழுவிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கடைசி 8 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.