சூர்யவன்ஷி மிகவும் இயற்கையான சிறுவன்..! இலங்கை கேப்டன் புகழாரம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் தசுன் ஷனாகா அளித்த பேட்டி குறித்து...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரரரும் இலங்கை 2026 டி20 உலகக் கோப்பை அணியின் கேப்டனுமான தசுன் ஷனாகா அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் பக்குவம் ஆச்சரியமளிப்பதாகக் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்றிரவு 7.30 மணிக்கு முல்லான்பூரில் எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் வெல்லும் அணி குவாலிஃபயர் 2 போட்டிக்கு முன்னேறும் என்பது கவனிக்கத்தக்கது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி நடப்பு ஐபிஎல் தொடரில் அந்த அணியிலேயே அதிக ரன்கள் (583) குவித்தவராக இருக்கிறார். சூர்யவன்ஷி குறித்து தசுன் ஷனாகா கூறியிருப்பதாவது:
Advertisement
Advertisement
சூர்யவன்ஷி மிகவும் தொழில்முறையான வீரராக இருக்கிறார். இது அவர் ரன்களைக் குவிக்கிறார் ஆட்டமிழக்கிறார் என்பதைப் பற்றியதல்ல. மாறாக, அவர் வலைப் பயிற்சியிலும் ஓய்வறையிலும் எப்படி நடந்துகொள்கிறார் என்பதைப் பற்றியது.
மிகவும் பொறுமையாக இருக்கிறார். ஓய்வறையில் ஒரு சிறுவன் இப்படி நடந்துகொண்ட நான் பார்த்ததே இல்லை. மூத்த வீரர்கள் அவர் மீது அழுத்தம் கொடுத்தாலும் அவர் மிகவும் பொறுமையாக இருக்கிறார்.
சூர்யவன்ஷி இதையெல்லாம் எதிர்கொள்ளும் விதம் பிடித்திருக்கிறது. ரன்கள் குவித்தாலும் ஆட்டமிழந்தாலும் அவர் பொறுமையாக இருக்கிறார். அவர் மிகவும் இயல்பான சிறுவன். அவரிடம் அதிகமான திறமைகள் இருப்பதாக நான் உணர்கிறேன் என்றார்.
தற்போது இலங்கை டி20 அணியின் கேப்டனாக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தசுன் ஷனாகா ராஜஸ்தான் அணியில் இணைந்த பிறகு அணியின் சமநிலை உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.