FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஜோகோவிச் விசா ரத்து விவகாரம்: ஆறுதல் அளிக்கும் நீதிமன்றத் தீர்ப்பு

ஜோகோவிச்சின் விசா மீண்டும் ரத்து செய்யப்பட்டால் அவரால் ஆஸ்திரேலியாவுக்குள் மூன்று வருடத்துக்கு நுழைய முடியாது...

Updated On : 10 ஜனவரி 2022, 12:44 pm IST
பகிர்:

2022 ஆஸ்திரேலிய ஓபன் போட்டி ஜனவரி 17-ல் தொடங்குகிறது. இப்போட்டியில் பங்கேற்க கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என போட்டி அமைப்பாளர்கள் கூறி வந்தார்கள்.

உலகின் நெ.1 வீரர் ஜோகோவிச்சுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் இல்லாததால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் அவரால் கலந்துகொள்ள முடியாத நிலை இருந்தது. இதுதொடர்பாக ஏராளமான விவாதங்கள் நடைபெற்றன.

கடந்த வருடம் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகிய மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் ஜோகோவிச் வென்றார். ஆடவா் ஒற்றையரில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை 9 முறை வென்றதோடு நடப்பு சாம்பியனாகவும் உள்ளார். 

Advertisement

Advertisement

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கலந்துகொள்வதை சில நாள்களுக்கு முன்பு ஜோகோவிச் உறுதி செய்தார். (தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும் என்கிற விதிமுறையிலிருந்து) விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறேன் என இன்ஸ்டகிராமில் அவர் தகவல் தெரிவித்தார். ஜோகோவிச்சுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் பலரும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதினார்கள். 

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்குபெறுவதற்காக கடந்த வாரம் மெல்போர்னுக்கு வந்த ஜோகோவிச்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடுப்பூசியின் இரு தவணைகள் செலுத்தியதற்கான சான்றோ, அல்லது அதிலிருந்து மருத்துவரீதியிலான முறையான விலக்கு பெற்றதற்கான ஆவணமோ அவரிடம் இல்லை எனக் கூறி ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினா் அவரை விமான நிலையத்திலேயே புதன்கிழமை இரவு தடுத்து நிறுத்தினா்.

இந்த விவகாரம் பற்றி ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் ட்விட்டரில் தெரிவித்ததாவது: ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகள் அனைவருக்கும் பொதுவானது. யாரும் விதிமுறைக்கு அப்பாற்றப்பட்டவர் அல்லர். எங்களுடைய தீவிரமான எல்லைக்கட்டுப்பாட்டு விதிமுறைகளால் தான் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைக் குறைவாக உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் உள்ளது. நாங்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருப்போம் என்றார். 

ஜோகோவிச்சுக்கான விசா ரத்து செய்யப்பட்டதுடன், அவா் மெல்போா்னில் உள்ள குடியேற்றத்துறையின் தடுப்புக் காவல் மையமாகச் செயல்படும் ஹோட்டலுக்கு அனுப்பப்பட்டாா். இந்த விவகாரம் தொடா்பாக இணைய வழி நீதிமன்றத்தில் ஜோகோவிச் தரப்பிலிருந்து அவசரகால மேல்முறையீடு மேற்கொள்ளப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், திங்கள்கிழமை வரை ஜோகோவிச்சை நாடு கடத்துவதற்கு தடை விதித்ததுடன், அடுத்தகட்ட விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தது. 

இந்நிலையில், ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்ட உத்தரவை நீக்கியுள்ளது ஆஸ்திரேலிய நீதிமன்றம். தீர்ப்பு வெளியான அடுத்த 30 நிமிடங்களில் தடுப்புக் காவல் மையத்திலிருந்து ஜோகோவிச்சை விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஜோகோவிச்சின் விசா குறித்த முடிவை ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாகி விரைவில் எடுக்கவேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஜோகோவிச்சின் விசா மீண்டும் ரத்து செய்யப்பட்டால் அவரால் ஆஸ்திரேலியாவுக்குள் மூன்று வருடத்துக்கு நுழைய முடியாது என்றும் கூறப்படுகிறது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments