ஆசியக் கோப்பை டி20 போட்டி எங்கு நடைபெறும்?: கங்குலி அறிவிப்பு
இலங்கையில் நடைபெறுவதாக இருந்த ஆசியக் கோப்பை டி20 போட்டி...
இலங்கையில் நடைபெறுவதாக இருந்த ஆசியக் கோப்பை டி20 போட்டி, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி கூறியுள்ளார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடா்ந்து, மக்கள் கடந்த மாா்ச் மாதம் முதல் தொடா் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். எனினும் இலங்கையில் கடந்த சில மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி நடைபெறுகின்றன.
Advertisement
Advertisement
கொழும்பில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் கொழும்பிலிருந்து காலேவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் ஆசியக் கோப்பைப் போட்டி என்பது 9 நாடுகள் பங்கேற்கக் கூடியது. அணிகளின் எண்ணிக்கை, எரிபொருள் பற்றாக்குறை, பலவீனமான பொதுப் போக்குவரத்து, தனியாா் வாகனங்களை இயக்குவதில் உள்ள சிரமம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு ஆசியக் கோப்பை டி20 போட்டி இலங்கையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை டி20 போட்டி இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபை மற்றும் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது என பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி கூறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதற்குக் காரணம், அங்குதான் மழை பெய்யாது என்றார்.