முகப்பு
செய்திகள்

இந்தியாவின் 79-வது, தமிழகத்தின் 28-வது: செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆன 16 வயது பிரனேஷ்!

இந்தியாவிலுள்ள 79 செஸ் கிராண்ட்மாஸ்டர்களில் 28 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்...

Updated On : 6 ஜனவரி 2023, 11:41 am IST
பகிர்:

இந்தியாவின் 79-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்கிற பெருமையைத் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரனேஷ் பெற்றுள்ளார்.

ரில்டன் கோப்பை 2022-23 செஸ் போட்டியில் இறுதிச்சுற்றில் நார்வே நாட்டைச் சேர்ந்த ஆல்சனை வீழ்த்தினார் காரைக்குடியைச் சேர்ந்த பிரனேஷ். இதையடுத்து தரவரிசையில் 2500 புள்ளிகளைப் பெற்று கிராண்ட்மாஸ்டருக்கான தகுதியை அடைந்துள்ளார். 2020 ஜனவரியில் கிராண்ட்மாஸ்டருக்கான முதல் தகுதியையும் 2020 டிசம்பரில் 2-வது தகுதியையும் அடைந்தார். கடந்த நவம்பரில் கடைசித் தகுதியையும் அடைந்து கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான கடைசிக்கட்டத்தில் இருந்தார். தற்போது அனைத்து விதமான நடைமுறைகளையும் பூர்த்தி செய்து கிராண்ட்மாஸ்டர் ஆகியுள்ளார். 

16 வயதில் தனியாக உலகமெங்கும் நடக்கும் செஸ் போட்டிகளுக்குச் சென்று (சிலசமயம் செஸ் வீரர்களாக உள்ள நண்பர்களுடன்) விளையாடி வருகிறார் பிரனேஷ். அவருடைய இந்தச் சாதனைக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

இந்தியாவின் 75-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்கிற பெருமையைச் சமீபத்தில் பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரணவ். இந்தியாவிலுள்ள 79 செஸ் கிராண்ட்மாஸ்டர்களில் 28 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம் இந்திய அளவில் கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தின் பங்களிப்பு மேலும் அதிகமாகியுள்ளது. 1988-ல் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார் தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த். 

தமிழ்நாட்டிலிருந்து மேலும் 100 செஸ் கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்குவதே தமிழக அரசின் திட்டமாக உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி முடிந்த பிறகு, சில செஸ் வீரர்களையும் பயிற்சியாளர்களையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் தமிழக அரசும் அழைத்து தமிழ்நாட்டில் செஸ் விளையாட்டை மேம்படுத்துவது குறித்து கலந்தாலோசித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.