முகப்பு
செய்திகள்

டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்: ரிக்கி பாண்டிங்

டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

Updated On : 28 மே, 2024 at 9:05 PM
ரிஷப் பந்த் - படம் | ஐசிசி
பகிர்:

டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், தில்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் கார் விபத்தில் சிக்கி, 14 மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ரிஷப் பந்த் ஐபிஎல் தொடர் மூலமாக மீண்டும் கிரிக்கெட் உலகில் அடியெடுத்து வைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் ரிஷப் பந்த்துக்கு சிறப்பானதாக அமைந்தது. தொடக்கத்தில் சில போட்டிகளில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அதன்பின் அதிரடியாக விளையாடினார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் 446 ரன்கள் குவித்தார். அவரது சராசரி 40.54 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 155.40 ஆகவும் உள்ளது. கீப்பராக அதிக ஆட்டமிழப்புகளை செய்தவர் என்ற சாதனையையும் படைத்தார்.

Advertisement

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ரிக்கி பாண்டிங் - படம் | ஐசிசி

இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் ஐசிசி ரிவ்யூவில் பேசியதாவது: நேர்மையாக கூற வேண்டுமென்றால்,ரிஷப் பந்த் மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கி அதிரடியாக விளையாடுவது வியக்கத்தக்கதாக இருக்கிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போது, ரிஷப் பந்த்துடன் சில மாதங்கள் செலவிட்டேன். அவருக்கு கார் விபத்து நேர்ந்து 3 - 4 மாதங்கள் ஆன பிறகு அவருடன் நேரம் செலவிட்டேன். அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாடவே முடியாது என்ற பயம் எனக்குள் எழுந்தது. அந்த நேரத்தில் அவரால் நடக்க கூட முடியவில்லை. அவர் ஊன்றுகோல்களை பயன்படுத்தியே நடந்தார்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அடுத்த ஐபிஎல் சீசன் பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்டேன். கவலைப்படாதீர்கள். அடுத்த ஐபிஎல் சீசனுக்குள் சரியாகி விடுவேன் என்றார். தில்லி கேபிடல்ஸ் பிசியோ பாட்ரிக் ஃபார்ஹார்ட் அவருக்கு சிறப்பான சிகிச்சையளித்தார். ஐபிஎல் தொடரில் அவர் விளையாடிய விதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அவரது விக்கெட் கீப்பிங் திறமைகள் அவருக்கு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுத் தந்ததாக நினைக்கிறேன். அவர் பேட்டிங் நன்றாக செய்வார் என்பது அனைவரும் எதிர்பார்த்ததே. ஆனால், 14 போட்டிகளிலும் ஒவ்வொரு பந்துக்கும் குனிந்து கீப்பிங் செய்வது என்பது கடினமானது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற்றது சிறப்பானது. அவரை மீண்டும் இந்திய அணியில் பார்க்கவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பயங்கர கார் விபத்துக்குப் பிறகு, ரிஷப் பந்த்தின் கம்பேக் ஆச்சரியப்பட வைக்கிறது. டி20 உலகக் கோப்பையில் அவர் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.