2-ஆவது அரையிறுதி ஆட்டம்: இன்று ஆர்ஜென்டீனா - இங்கிலாந்து மோதல்!
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா - இங்கிலாந்து அணிகள் குறித்து...
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா - இங்கிலாந்து அணிகள் புதன்கிழமை (ஜூலை 15) சந்திக்கின்றன.
இதில், 3 முறை சாம்பியனான ஆர்ஜென்டீனாவுக்கு இது 6-ஆவது உலகக் கோப்பை அரையிறுதியாகும். 1966-ஆம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து, 4-ஆவது முறையாக அரையிறுதிக்கு வந்துள்ளது.
இவ்விரு அணிகளும் சந்தித்துக்கொள்வது, கடந்த 21 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. கடைசியாக இவை 2005-இல் நட்பு ரீதியிலான ஆட்டத்தில் மோதியபோது, அதில் இங்கிலாந்து வென்றது (3-2).
Advertisement
Advertisement
இந்த உலகக் கோப்பை போட்டியில் ஆர்ஜென்டீனா அணியைப் பொருத்தவரை, தொடக்கத்திலிருந்து 6 ஆட்டங்களிலுமே வென்றுள்ளது. அவற்றில் மொத்தமாக 17 கோல்கள் அடித்திருப்பதன் மூலமாக, தாக்குதல் ஆட்டமே அதன் பிரதான ஆயுதமாக இருப்பதை அறியலாம்.
அதில் ஏறத்தாழ சரிபாதி கோல்கள் (8) அடித்திருக்கும் கேப்டன் லயனல் மெஸ்ஸி, அணியின் முக்கியமான பலமாகத் திகழ்கிறார். அவர் தவிர, லெளதாரோ மார்டினெஸ், ஜூலியன் ஆல்வரெஸ், என்ஸோ ஃபெர்னாண்டஸ் என மேலும் சில வீரர்களும் அணிக்குக் கைகொடுக்கின்றனர்.
இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை, இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில், 5-இல் வென்று, ஒன்றை டிரா செய்துள்ளது. போட்டியில் இதுவரை 13 கோல்கள் அடித்திருக்கும் இங்கிலாந்து, இதர அணிகளைக் காட்டிலும் கோல் வாய்ப்புகளை அதிகமாக உருவாக்கிய அணியாக இருக்கிறது.
அதில் கோல் அடிக்கும் முக்கியமான பணியை ஹேரி கேன், ஜூட் பெலிங்கம் பார்த்துக் கொள்கின்றனர். இங்கிலாந்து அணி இதுவரை அடித்திருக்கும் 13 கோல்களில், இவர்கள் இருவர் மட்டுமே தலா 6 கோல்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆர்ஜென்டீனா - இங்கிலாந்து அணிகள் இதுவரை 14 முறை மோதியிருக்க, அதில் இங்கிலாந்து 6 வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆர்ஜென்டீனா 3 வெற்றிகள் கண்டிருக்க, 5 ஆட்டங்கள் டிரா ஆகியுள்ளன.
குறிப்பாக உலகக் கோப்பை போட்டிகளில் அவை 5 முறை மோதியிருக்க, அதிலும் இங்கிலாந்து 3 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது. ஆர்ஜென்டீனா 2 வெற்றிகளுடன் பின்தங்கியிருக்கிறது.
அந்த 5 ஆட்டங்களுமே குரூப் சுற்று, நாக்அவுட் சுற்று, காலிறுதிக் கட்டத்தில் நடைபெற்ற நிலையில், உலகக் கோப்பை அரையிறுதியில் இந்த அணிகள் சந்திப்பது இது முதல்முறையாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.