வெனிசுவேலா நிலநடுக்கத்தில் பலியான அர்ஜென்டினா கால்பந்து வீரரின் மனைவி, குழந்தைகள்!
வெனிசுவேலா நிலநடுக்கத்தில் அர்ஜென்டினா கால்பந்து வீரரின் மனைவி, குழந்தைகள் உயிரிழந்தது பற்றி...
வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி மற்றும் இரு குழந்தைகள் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென் அமெரிக்காவில் உள்ள தீவு நாடான வெனிசுவேலாவில் கடந்த வாரம் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நிலநடுக்கத்தில் இதுவரை 1,000 பேர் பலியாகியுள்ளனர். மேலும், காணாமல் போன ஆயிரக்கணக்கானோரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், அர்ஜென்டினாவின் 'டிபோர்ட்டிவோ லா குயைரா’ கிளப் அணிக்காக விளையாடி வரும் கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி யானினா மாரானெல்லா மற்றும் இரண்டு குழந்தைகள் ஆரோன், ஐன்ஹோவா ட்ரெஜோ நிலநடுக்கத்தில் உயிரிழந்துள்ளனர்.
Advertisement
Advertisement
நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வெனிசுவேலாவின் கடலோரப் பகுதியான பிளாயா கிராண்டேவில் உள்ள குடியிருப்பில் லூகாஸ் ட்ரெஜோவின் குடும்பத்தினர் வசித்து வந்தனர்.
இந்த நிலநடுக்கத்தில் லூகாஸ் ட்ரெஜோ குடும்பத்தினர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. இந்த நிலையில், மீட்புப் படையினரின் உதவியுடன் லூகாஸ் ட்ரெஜோ தனது குடும்பத்தினரைத் தேடி வந்த நிலையில், அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் போது, தனது அணி வீரர்களுடன் வேறு இடத்தில் லூகாஸ் ட்ரெஜோ தங்கியிருந்ததால் அவர் உயிர்தப்பினார்.
முன்னதாக, தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த லூகாஸ் ட்ரெஜோ, தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்த பதிவில், “என் குடும்பம் தங்கியிருந்த கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. அவர்கள் பற்றிய தகவல் எதுவும் எனக்கு தெரியவில்லை. ஒருவேளை யாராவது அவர்களைப் பார்த்திருந்தால், இந்தச் செய்தியைப் பகிருங்கள். அவர்கள் அங்கே இல்லை என்று நான் நம்ப விரும்புகிறேன். தயவுசெய்து என் குடும்பத்திற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
Wife and children of Argentine footballer killed in Venezuela earthquake!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.