முகப்பு
தமிழ்நாடு

இரட்டை இலை சின்னம் தொடர்பான புகார்: இரு அணிகளிடமும் நேரில் விசாரிக்க தேர்தல் ஆணையம் முடிவு! 

நடைபெற இருக்கும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளாளர் சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு அணிகளிடமும் ...

Updated On : 17 மார்ச், 2017 at 6:44 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:45 PM

புதுதில்லி: நடைபெற இருக்கும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளாளர் சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு அணிகளிடமும் வரும் 22-ஆம் தேதியன்று நேரில் விசாரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு சசிகலா அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். பிறகு அவர் முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த பன்னீர்செல்வம் தலைமையிலான கட்சியின் மூத்த நிர்வாகிகள் தனி அணியாக செயல்படுகின்றனர். மேலும் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அடங்கிய தாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக  நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். அதற்காக சசிகலாவிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியது.

இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பன்னீர்செல்வம் அணியினர் தாங்கள் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவித்தனர். மேலும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென்று கோரி பன்னீர்செல்வம் நேரடியாக தில்லி சென்று தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து மனு கொடுத்தார். அவருக்கு போட்டியாக அதிமுக எம்.பிக்கள் அனைவரும் தேர்தல் ஆணையரை சந்தித்து மனு கொடுத்தனர்.

Advertisement

இந்நிலையில் நடைபெற இருக்கும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளாளர் சசிகலா மற்றும் அதிருப்தி அணியின் பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் தலைமை தேர்தல் ஆணையம் இன்று மாலை நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று தகவல்கள் வெளியானது.

ஆனால் தற்போது சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக இரண்டு அணிகளிடமும் நேரில் விசாரணை நடத்துவது என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து வரும் 22-ஆம் தேதி புதன்கிழமை அன்று  காலை 10 மணிக்கு புதுதில்லி தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆஜராகுமாறு இரண்டு அணிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.