இந்திய அணிக்கு புதிய ஃபீல்டிங் பயிற்சியாளர் நியமனம்..! யார் இந்த சுபதீப் கோஷ்?
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதியதாக நியமிக்கப்பட்டுள்ள ஃபீல்டிங் பயிற்சியாளர் குறித்து...
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதியதாக ஃபீல்டிங் பயிற்சியாளராக சுபதீப் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக பணியாற்றி வந்த டி. திலீப் தனது ஒப்பந்தம் முடிவுற்றதுடன் நீக்கப்பட்டார்.
இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளராக ரியான் டென் டொஸ்சாட்டும், ஃபீல்டிங் பயிற்சியாளராக திலீப்பும் செயல்பட்டு வந்தனர். இவர்கள் இருவரின் பிசிசிஐ ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டதாகவும், அவர்களது ஒப்பந்தத்தை நீட்டிக்கப்படவில்லை எனவும் பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்திய அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக சுபதீப் கோஷ் (57 வயது) நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்ஸாமைச் சேர்ந்த இவர் இந்திய மகளிரணிக்கு ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்து வந்தார்.
Advertisement
Advertisement
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2022, மகளிர் டி20 உலகக் கோப்பை 2023ல் சுபதீப் கோஷ் முக்கிய பங்காற்றினார். அதுமட்டுமில்லாமல், இந்தியா ஏ அணிக்கும் அஸ்ஸாம் ஆடவர் சீனியர் அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
வலது பேட்டரான அவர் 17 முதல்தர கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். பல லிஸ்ட் ஏ மற்றும் ரெயில்வே போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
திலீப் இந்திய அணியில் 2021 முதல் 2025 பார்டர் கவாஷ்கர் தொடர் வரை பொறுப்பில் இருந்தார். பின்னர், ஓராண்டு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.
உதவி பயிற்சியாளராக இருந்த ரியான் டென் டொஸ்சாட் கேகேஆர் அணியில் இணைந்தார். திலீப் என்ன செய்வார் என்பது இதுவரை உறுதியாகவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்தியா - இலங்கை இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
Subhadeep Ghosh replaces T Dilip as India men's fielding coach
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.