ஜெயலலிதா மரணம்: கொடநாடு எஸ்டேட் முன்னாள் உரிமையாளரிடம் விசாரணை
ஜெயலலிதா மரணம் தொடர்பாக கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் உரிமையாளர் பீட்டர் ஜோன்ஸ் விசாரணை ஆணையத்தில் புதன்கிழமை ஆஜராகி விளக்கம் அளித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் உரிமையாளர் பீட்டர் ஜோன்ஸ் விசாரணை ஆணையத்தில் புதன்கிழமை ஆஜராகி விளக்கம் அளித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு, அப்பல்லோ மருத்துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
முன்னாள் உரிமையாளர் ஆஜர்: பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் ஜோன்ஸ் என்பவருக்குச் சொந்தமாக நீலகிரி மாவட்டம், கொடநாட்டில் உள்ள எஸ்டேட்டை ஜெயலலிதா கடந்த 1994-ஆம் ஆண்டு வாங்கினார். தன்னை மிரட்டி கோடநாடு எஸ்டேட்டை எழுதி வாங்கியதாக பீட்டர் ஜோன்ஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், பீட்டர் ஜோன்ஸுக்கு விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பியிருந்தது. இதையடுத்து, சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் பீட்டர் ஜோன்ஸ் புதன்கிழமை ஆஜரானார். அவரிடம் கொடநாடு சொத்துகள் குறித்தும், அது யார் பெயரில் வாங்கப்பட்டது என்பது குறித்தும் நீதிபதி ஆறுமுகசாமி கேட்டறிந்தார்.
எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆஜர்: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, மருத்துவ ஆலோசனை வழங்க எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது. அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த மருத்துவர்கள் டாண்டன், தேவ் கௌரவ் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் புதன்கிழமை ஆஜராகினர். அவர்களிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அவரது உடல்நிலை ஆகியவை குறித்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.