குடியிருப்பு பகுதிக்குள் மீண்டும் நுழைந்த காட்டெருமை
உதகையில் டாஸ்மாக் வளாகத்துக்குள் புகுந்து 20 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் விரட்டப்பட்ட காட்டெருமை தொட்டபெட்டா
உதகையில் டாஸ்மாக் வளாகத்துக்குள் புகுந்து 20 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் விரட்டப்பட்ட காட்டெருமை தொட்டபெட்டா மலைச் சிகர அடிவாரத்திலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் மீண்டும் முகாமிட்டுள்ளது.
இந்தக் காட்டெருமையை மயக்க மருந்து செலுத்தி பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் கொண்டு சென்றுவிடுவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படாததால் அந்தக் காட்டெருமையை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியாமல் வனத் துறையினர் திணறி வருகின்றனர்.
உதகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கமர்ஷியல் சாலை பகுதியிலுள்ள டாஸ்மாக் வளாகத்துக்குள் புகுந்த காட்டெருமை பல மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு அங்கிருந்து விரட்டப்பட்டு பல்வேறு இடையூறுகளுக்குப் பின்னர் அரசினர் தாவரவியல் பூங்கா அருகேயுள்ள தனியார் காட்டேஜ் ஒன்றில் விடப்பட்டது.
தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் அங்கேயே இருந்த அந்தக் காட்டெருமை புதன்கிழமை அதிகாலையில் மீண்டும் நகரப் பகுதிக்குள் வந்து தொட்டபெட்டா மலைச் சிகரத்தின் அடிவாரத்திலுள்ள ஆரணி ஹவுஸ் பகுதியில் புகுந்துவிட்டது. வனப் பகுதிக்குள் விரட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அந்தக் காட்டெருமை அங்கிருந்து நகரவில்லை. வியாழக்கிழமையும் இதே நிலையே நீடித்தது.
இதற்கிடையே இந்த ஆண் காட்டெருமைக்கு வயதாகிவிட்டதாலும், கண் பார்வை மங்கிவிட்டதாலும், உணவைத் தேடிச் சென்று எடுக்க முடியாத காரணத்தால், தான் தேர்வு செய்யும் இடத்திலேயே பல மணி நேரம் தங்கி விடுவதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்தக் காட்டெருமைக்கு மயக்க மருந்து செலுத்தி அதை வாகனத்தில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் விடுவித்துவிடலாமென்ற யோசனை வனத் துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத் துறையின் தலைமை மற்றும் முதன்மை வன உயிரின பாதுகாவலருக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் மாவட்ட வன அலுவலர் சுமந்த் சோமன், கால்நடைத் துறை இணை இயக்குநர் டாக்டர் மனோகரன் ஆகியோர் இந்த யோசனையைத் தெரிவித்துள்ளனர். ஆனால், வியாழக்கிழமை மாலை வரை இதற்கான எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
இதனால், ஆரணி ஹவுஸ் பகுதியில் வனத் துறையினர் தொடர்ந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காட்டெருமை அங்கிருந்து நகராவிட்டாலும், அதிக காட்டேஜ்கள் மற்றும் தனித்தனி வீடுகள் அமைந்துள்ள ஆரணி ஹவுஸ் பகுதியிலுள்ள குடியிருப்பு ஏதாவதில் புகுந்து விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர்.
இச்சூழலில் அந்தக் காட்டெருமையை மயக்க மருந்து செலுத்தி கிரேன் மூலம் கொண்டு செல்வதற்கான ஆணை வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்டு விடும் எனவும், வெள்ளிக்கிழமை இரவுக்குள் அந்தக் காட்டெருமையை அங்கிருந்து கொண்டு சென்று விட முடியும் எனவும் வனத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.