முகப்பு
தமிழ்நாடு

நாடு மோடியின் பலமான தலைமையில் பாதுகாப்பாக இருக்கிறது: தமிழிசை பாராட்டு 

நம் நாடு பிரதமர் மோடி அவர்களின் பலமான தலைமையில் பாதுகாப்பாக இருக்கிறது என்று மாநில பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:14 AM
பகிர்:

சென்னை: நம் நாடு பிரதமர் மோடி அவர்களின் பலமான தலைமையில் பாதுகாப்பாக இருக்கிறது என்று மாநில பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதியன்று சி.ஆர்.பி.எப் வீரர்களின் வாகனங்களின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 40 வீரர்கள் மரணமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவமானது இந்திய மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த கொடூர தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு திட்டமிட்டு நடத்தியது தெரிய வந்தது. தற்போது தேசிய விசாரணை ஆணையம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலில் மரணமடைந்தவர்களில் அஸ்ஸாமைச் சேர்ந்த தலைமைக் காவலர் மனேஸ்வர் பசுமத்தாரியும் ஒருவர்.  புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப் படையின் விமானங்கள் செவ்வாய் அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பால்கோட் பகுதியில் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தன. இந்த தாக்குதலில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நம் நாடு பிரதமர் மோடி அவர்களின் பலமான தலைமையில் பாதுகாப்பாக இருக்கிறது என்று மாநில பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பாகிஸ்தானில் பாலகோட் பகுதியில் செயலாற்றிவந்த பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்த இந்திய விமானப்படையின் வீரத்திற்கு தலை வணங்குவோம்.பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.இதனை சாதித்த இந்திய வீரர்களுக்கு பாராட்டுக்கள்.

இந்தியப்படையின் வீரத்திற்கு தலைவணங்குவோம்.இந்தியா எந்த நிலையிலும் தீவிரவாதத்தைப் பொறுத்துக்கொள்ளாது என்பதை நிரூபித்திருக்கிறது.இன்றைய நடவடிக்கை நம் நாடு பிரதமர் மோடி அவர்களின் பலமான தலைமையில் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.