ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று போர் வீரர்களின் வாரிசு தாரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அதைத் தொடர்ந்து கேப்டன் குபேர காந்திராஜ் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30.11.2021) தலைமைச் செயலகத்தில், ராணுவத்தில் பணியாற்றி வீர மரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று போர் வீரர்களின் வாரிசுதாரர்களை நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்து, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
ராணுவத்தில் பணியாற்றி வீர மரணமடைந்த காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த படை வீரர் கே. ஏகாம்பரம் -அவருடைய மனைவி இ.குமாரி,
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தைச் சேர்ந்த படைவீரர் கே.கருப்பசாமி -அவருடைய மனைவிஆர். தமயந்தி,
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த படைவீரர் பி.பழனிகுமார் - அவருடைய மனைவி ஜி. பாண்டியம்மாள் ஆகியோருக்கு முதல்வர், கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து தலா
20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
மேலும், லடாக் - காரகோரம் கணவாயிலிருந்து மலரி வரை (ஜோஷிமத், உத்ரகாண்ட் மாநிலம்) பனிச்சறுக்கு மூலம் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற குழுவில் பங்கேற்ற முதல் தமிழ்நாட்டு ராணுவ வீரரான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கேப்டன் எஸ்.குபேர காந்திராஜின் (IC-80931P) சாதனையை கௌரவித்து முதல்வர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
இந்நிகழ்வில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., பொதுத்துறை செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன், இ.ஆ.ப., பொதுத்துறை சிறப்புச் செயலாளர் வி.கலையரசி, இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.