முகப்பு
தமிழ்நாடு

பதக்கங்கள் வென்ற 190 வீரர்களுக்கு ரூ.4.85 கோடி ஊக்கத்தொகை: முதல்வர் வழங்கினார்!

தேசிய  மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ. 4.85 கோடி உயரிய ஊக்கத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Updated On : 24 நவம்பர் 2022, 4:41 pm IST
பகிர்:

சென்னை: தேசிய  மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ. 4.85 கோடி உயரிய ஊக்கத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில், தேசிய  மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.4 கோடியே 85 லட்சம் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

Advertisement

Advertisement

அந்த வகையில், இவ்வாண்டு கொலம்பியாவில் நடைபெற்ற 20 வயதிற்குட்பட்டோருக்கான  உலக தடகள வாகையர் போட்டியில், டிரிப்பிள் ஜம்ப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற டி. செல்வபிரபு, கலப்பு தொடர் ஒட்டப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற பரத் ஸ்ரீதர் ஆகியோருக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் மொத்தம் ரூ.8 லட்சம்.

இந்தோனேசியா நாட்டின் ஜகார்தாவில்  நடைபெற்ற ஆசிய கோப்பை வளைகோல்பந்து  வாகையர் போட்டியில் இந்திய அணியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் எஸ். மாரீஸ்வரன் மற்றும் எஸ். கார்த்தி ஆகியோருக்கு தலா ரூ. 10 லட்சம் வீதம், மொத்தம் ரூ.20 லட்சம்.

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐக்கிய அரபு நாட்டின் சார்ஜாவில் நடைபெற்ற உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக அளவிலான விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர் தடகளப் போட்டிகளில் 2 தங்கப்பதக்கங்கள் வென்ற ஆர். பாலசுப்பிரமணியன் ரூ.10 லட்சம், ஈட்டி எறிதல்  போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஏ. செல்வராஜ் ரூ. 5 லட்சம், குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற ஜி. விஜயசாரதிக்கு ரூ.4 லட்சம், ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல்  போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற கே. கணேசனுக்கு ரூ. 4 லட்சம், குண்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற எஸ். மனோஜ் ரூ.2 லட்சம், இறகுப்பந்து ஒற்றையர் பிரிவு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற எஸ். சிவராஜன் ரூ.3 லட்சம். 

இதையும் படிக்க | அனைவருக்குமான வளர்ச்சிதான் திராவிட மாடல் வளர்ச்சியாக அமையும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
 
குஜராத்தில் 29.9.2022 முதல் 12.10.2022 வரை  நடைபெற்ற 36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில்  வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 68 விளையாட்டு வீரர்கள் மற்றும் 112 விளையாட்டு வீராங்கனைகள், என 180 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.4 கோடியே 29 லட்சம் என தேசிய  மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.4 கோடியே 85 லட்சம் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார். 

இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்றுவரை 1433 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.40.90 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.