முகப்பு
தமிழ்நாடு

திருப்பூரில் நூல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் நூல் விலை உயர்வைக் கண்டித்து உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 14 மே 2022, 12:53 pm IST
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர்.
பகிர்:

திருப்பூர்: திருப்பூரில் நூல் விலை உயர்வைக் கண்டித்து உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனைக் கண்டித்து திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த அமைப்புகள் சார்பில் வரும் மே 16, 17 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருப்பூர் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவரும், துணை மேயருமான ஆர்.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

இதில், பங்கேற்றவர்கள் கூறியதாவது: திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நூல் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளதால் பின்னலாடைத் தொழிலை நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, பஞ்சு, நூல் ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். பஞ்சை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். கடந்த மே மாதத்தில் உயர்த்தப்பட்ட நூல் விலையை கிலோவுக்கு ரூ.40 ஐ நூற்பாலைகள் உடனடியாகக் குறைக்க வேண்டும் என்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா எம்.சண்முகம், நிட்மா தலைவர் அகில் எஸ்.ரத்தினசாமி, டீமா தலைவர் எம்.பி.முத்துரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.