வாட்ஸ்ஆப் மூலம் புலிக் குட்டி விற்பனை! வேலூரில் இளைஞர் கைது
வாட்ஸ்ஆப் மூலம் ரூ.25 லட்சத்துக்கு புலிக் குட்டி விற்பனை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர்: வாட்ஸ்ஆப் மூலம் ரூ.25 லட்சத்துக்கு புலிக் குட்டி விற்பனை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். திருப்பதியில் சட்டம் பயிலும் இவர், வேலூர் மாநகருக்குட்பட்ட சார்ப்பனாமேடு பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்த்திபன் தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டசில் புலிக் குட்டி விற்பனை உள்ளத்தென்றும், விலை ரூ.25 லட்சம் என்றும், முற்றிலும் இது உண்மையான தகவல் என தெரிவித்துள்ளார்.
இதனை கண்காணித்த சென்னையை சேர்ந்த தலைமை வனத்துறையினர் இது குறித்து வேலூர் மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேலூர் வன அலுவலர் ரவிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சார்பனமேடு பகுதியில் வசித்து வந்த பார்திபனை 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement
Advertisement
விசாரணையில், சென்னை அம்பத்தூரை சேர்ந்த தமிழ் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, சென்னை வனத்துறையினர் தமிழ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பார்க்க : ராஜிவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை - புகைப்படங்கள்
வேலூரில் கைதான பார்த்திபன், இதில் இடைதரகராக செயல்பட்டவர் என்றும், சென்னையை சேர்ந்த தமிழ் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் இருவருக்கும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மற்றும் வேலூர் வனத்துறையினர் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.