தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.
கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
நமது சமுதாயத்தில் மிகவும் போற்றிப் பாதுகாக்கக் கூடிய குழந்தைகளின் நலனை உறுதி செய்வதில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் குழந்தைகள் நல சேவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த மையங்கள் மிகுந்த செயல்திறனுடன் செயல்படுவதையும், மையங்களின் பராமரிப்பில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஆரோக்கியமான வளர்ப்புச் சூழலை வழங்குவதையும் உறுதி செய்வது என்பது அரசினுடைய முக்கிய கடமையாகும்.
இந்த மையங்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு போதுமான பாதுகாப்பு புகலிடங்களாகச் செயல்படுகின்றன. அத்தியாவசிய ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி மற்றும் அத்தகைய வாய்ப்புகள் கிட்டாத குழந்தைகளுக்கு அவர்களின் நிலை அறிந்து சேவை செய்வது என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
இத்தகைய அங்கன்வாடி மையங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்வது என்பது மிக முக்கியமானதாகும். இவ்வாறு ஆய்வு மேற்கொள்ளும்போது அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள், திட்டங்கள் ஆகியவற்றை சரியான முறையில் அளவிடவும், அம்மையங்களின் முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை நல்வழிபடுத்திட வழிவகை செய்கிறது.
மேலும் அங்கன்வாடி மைய கட்டட நிலை, கழிப்பறை வசதி, தண்ணீர் விநியோகம், புகையில்லா அடுப்பு, அங்கன்வாடி சுவர்களில் விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் ஓவியங்கள், 3 வயத்துக்குள்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு அளித்தல், முன்பருவ பள்ளி வசதிகள், உணவுப் பொருள்களின் இருப்பு நிலை, கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாறுகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்த தரவுகள் பராமரித்தல், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கூடுதல் உணவு வழங்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.