முகப்பு
தமிழ்நாடு

நீட் தேர்வு: தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தந்தையும் தற்கொலை

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தந்தையும் தற்கொலை செய்துகொண்டார்.

Updated On : 14 ஆகஸ்ட் 2023, 12:01 pm IST
பகிர்:

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் நீட் தேர்வு தோல்வியால் நேற்று தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தந்தை இன்று தற்கொலை செய்துகொண்டார்.

புகைப்பட கலைஞரான செல்வத்தின் மகன் ஜெகதீஸ்வரன் நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில், செல்வம் இன்று தற்கொலை செய்துகொண்டது குடும்பத்தினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வில் இரண்டு முறை தோல்வி அடைந்த மாணவா், விரக்தியில் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

Advertisement

சென்னை குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சோ்ந்த புகைப்படக்காரா் செல்வம் மகன் ஜெகதீஸ்வரன் (19). மருத்துவ படிப்பில் ஜெகதீஸ்வரனுக்கு அதிக ஆா்வம் இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தோ்வு எழுதி வந்தாா்.

ஆனால் இரண்டு முறையும் தோ்வில் தோ்ச்சி பெறாத காரணத்தால், மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஜெகதீஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுக்கொண்டாா்.

இதையடுத்து அவா் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து சிட்லப்பாக்கம் போலீஸாா் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், மகன் இறந்த துக்கத்தில் இருந்த செல்வம் இன்று தற்கொலை செய்து கொண்டது உறவினர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நீட் தேர்வை எதிர்த்துப் போராட நான் தயார்.. எல்லோரும் எனக்கு ஆதரவு தெரிவித்தால், தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல, இந்தியாவிலிருந்தே நீட் தேர்வை ஒழிக்க முடியும் என்று தன் மகன் இறந்த துக்கத்துடன் நேற்று ஊடங்களில் பேட்டியளித்திருந்த செல்வம் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டிருப்பது அப்பகுதியினரிடையே பெரும் கலக்கத்தை உருவாக்கியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.