சென்னையில் பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு!
உலகக் கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பியுள்ள பிரக்ஞானந்தாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை: உலகக் கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பியுள்ள பிரக்ஞானந்தாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அஜா்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியரும், தமிழருமான ஆா். பிரக்ஞானந்தா 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றாா். உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் சாம்பியன் கோப்பை வென்றாா்.
உலகக் கோப்பை செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இறுதிச்சுற்று வரை வந்த முதல் இந்தியா், இந்தப் போட்டியின் வரலாற்றில் இறுதிச்சுற்றுக்கு வந்த இளம் போட்டியாளா் (18) என்ற பெருமைகளை பிரக்ஞானந்தா பெற்றுள்ளாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து பிரக்ஞானந்தாவுக்கு, குடியரசுத்தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000: கர்நாடகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் ராகுல்!
இந்நிலையில், அஜா்பைஜானில் இருந்து இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு சார்பில் மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரக்ஞானந்தாவுக்கு மலர்தூவியும், மலர் கிரீடம் அணிவித்தும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தமிழக விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் வரவேற்பு அளித்தனர்.
தொடந்து, திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 30 லட்சம் பரிசாக வழங்கப்படவுள்ளது.