’எதற்கும் அஞ்சாத துணிச்சல்..’: கமல்ஹாசன் இரங்கல்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேலும், கட்சித் தொண்டர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்த கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் எக்ஸ் பக்கத்தில்,
“எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.
இதையும் படிக்க: விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை: மு.க. ஸ்டாலின்
தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது.
சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என தன் இரங்கலைப் பதிவு செய்திருக்கிறார்.