முகப்பு
தமிழ்நாடு

முரசு கொட்டி வாக்குச் சேகரித்த விஜயபிரபாகரன்! 

ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து விஜயபிரபாகரன் முரசு கொட்டி வாக்குச் சேகரித்தார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:31 AM
பகிர்:

ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து விஜயபிரபாகரன் முரசு கொட்டி வாக்குச் சேகரித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த் போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாள்களாக கட்சியினருடன் சேர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

இந்தநிலையில் புதன்கிழமை காலை தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட அன்னை சத்யா நகர், சிந்தன் நகர்,16 சாலை, வைராபாளையம் ஆகிய பகுதிகளில் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வாக்குச் சேகரித்தார்.

அப்போது, பெண்கள் அவரை சூழ்ந்து கொண்டு நீங்கள் பார்ப்பதற்கு விஜயகாந்த் மாதிரி உள்ளீர்கள் என்று கூறி விஜய பிரபாகரனுடன் சுயபடம் எடுத்துக் கொண்டனர். 

இதைத்தொடர்ந்து விஜயபிரபாகரன் தனது கட்சியின் முரசு சின்னத்தை பிரதிபலிக்கும் வகையில் முரசு கொட்டி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதைத்தொடர்ந்து விஜய பிரபாகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மக்கள் மத்தியில் விஜயகாந்துக்கும், எங்களது கட்சி வேட்பாளருக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. முரசு சத்தம் கேட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். அதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. 

தேமுதிக.கடந்த 2006 ஆம் ஆண்டு அதிமுக, திமுக கட்சிகளை எதிர்த்துதான் போட்டியிட்டது. நடுவில்தான் கூட்டணி அமைத்தது. ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற வியூகம் அமைத்து வருகிறோம். எங்கள் பலத்தை நிரூபிக்கும் தேர்தலாக இது இருக்கும்.

எல்லா தேர்தலிலும் பணம் புழக்கம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் காலங்கள் இருக்கிறது. இப்போதைக்கு எங்கள் கவனம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் மட்டுமே உள்ளது. கூட்டணி குறித்து எங்கள் கட்சியின் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா உரிய நேரத்தில் அறிவிப்பார்கள் என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →