முகப்பு
தமிழ்நாடு

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் பதற்றம்; பண்டிட் சுட்டுக்கொலை

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பண்டிட் சமுகத்தினரான ஒருவரை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Updated On : 26 பிப்ரவரி, 2023 at 4:07 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:06 PM


ஸ்ரீநகர்: காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பண்டிட் சமுகத்தினரான ஒருவரை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தினரான பண்டிட் சமுகத்தினரை குறிவைத்து தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

தீவிரவாத தாக்குதலை தடுக்க பாதுகாப்புப் படையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பண்டிட் சமுகத்தை சேர்ந்த ஒருவரை தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொன்றனர்.

அச்சென் பகுதியை சேர்ந்த சஞ்சய் சர்மா(40) என்ற நபர் தனது மனைவியுடன் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் அங்குள்ள சந்தை பகுதிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை இடைமறித்த தீவிரவாதிகள் சஞ்சய் சர்மாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதையடுத்து துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சஞ்சய் சர்மாவை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஞ்சய் சர்மாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

தீவிரவாத தாக்குதல் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய தீவிரவாதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

காஷ்மீரில் பண்டிட்களை குறிவைத்து மீண்டும் தீவிரவாத தாக்குதல் அரங்கேறியுள்ளதால் ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காஷ்மீரில் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்க பாஜக அரசு தவறிவிட்டதென மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.