முகப்பு
தமிழ்நாடு

சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொகுசு காரின் டயர்களை கழட்டிச் சென்ற மர்ம நபர்கள்: சீர்காழியில் பரபரப்பு!

சீர்காழியில் பிரதான சாலையின் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொகுசு காரின் நான்கு டயர்களையும்  மர்ம நபர்கள் கழட்டிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:16 PM
வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த சொகுசு காரின் நான்கு டயர்களையும் மர்ம நபர்கள் கழட்டிச் சென்றனர்.
பகிர்:


சீர்காழியில் பிரதான சாலையின் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொகுசு காரின் நான்கு டயர்களையும்  மர்ம நபர்கள் கழட்டிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் தெற்கு வீதி காந்தி பூங்கா எதிரே வசிப்பவர் முத்துராமன். நகை வணிகம் செய்து வருகிறார். கடந்த ஆண்டு புதுரக சொகுசு கார் வாங்கியுள்ளார்.  

இந்தநிலையில் கடந்த வாரம் முத்துராமன் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டு பின்னர் ஒரு  சில நாட்களாக தனது வீட்டின் முன்பு காரினை நிறுத்தி வைத்து கவர் கொண்டு மூடி வைத்திருந்தார். 

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த காரின் நான்கு டயர்களையும் கல்லை வைத்து முட்டுக்கொடுத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திங்கள்கிழமை காலை முத்துராமன் எழுந்து பார்த்தபோது காரின் டயர்கள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இது குறித்து  முத்துராமன் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் வெள்ளை நிற கார் ஒன்று இருமுறை சென்று வருவதும், பின்னர் நீண்ட நேரம் ஒரு இடத்தில் நின்று விட்டு மீண்டும் செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இதனால் மர்ம நபர்கள் காரில் வந்து டயர்களை கழட்டி திருடிச் சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.

சீர்காழி நகரின் மையப் பகுதியான தேர் தெற்கு வீதியில் பிரதான சாலையில் வீட்டின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த காரில் நான்கு டயர்களையும் பொறுமையாக யார் கண்ணிலும் தென்படாமல்  திருடிச் சென்ற மர்ம நபர்களின் செயல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →