முகப்பு
தமிழ்நாடு

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 30 ஏப்ரல், 2024 at 6:34 AM
பகிர்:

வாழப்பாடி: வாழப்பாடி அருகே புதையல் எடுத்துக் கொடுப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த போலி மந்திரவாதிகள் இருவரை வாழப்பாடி போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி செல்லியம்மன்நகர் பகுதியில் வசித்து வருபவர் சேர்ந்தவர் விமலா (50).

சின்னமநாயக்கன்பாளையம் பகுதியில் செங்கல் சூளை நடத்தி வரும் இவர், திருச்செங்கோட்டை சேர்ந்த ஒருவரின் ஆலோசனையில், கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார்(46). என்பவரிடம் ஜோதிடம் பார்ப்பதற்காக செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.

Advertisement

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட போலி மந்திரவாதி சுரேஷ்குமார், அவரது உறவினர் சரவணன்(44) என்பவருடன் சேர்ந்து, உங்களது தோட்டத்தில் விலை மதிப்புமிக்க புதையல் இருப்பதாக விமலாவிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதனை நம்பிய விமலா, போலி மந்திரவாதி சுரேஷ்குமார் மற்றும் சரவணன் ஆகியோரிடம் ரூ.6 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார். ஆனால் போலி மந்திரவாதிகள் புதையல் எடுத்துக் கொடுக்கவில்லை. இதனால் ஏமாந்ததை உணர்ந்து விமலா பணத்தை திருப்பி கொடுக்கும்படி பலமுறை கேட்டும் இருவரும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

எனவே சுரேஷ்குமாரையும் அவரது உறவினர் சரவணனையும், தனது உறவினர்கள் உதவியுடன் ஏத்தாப்பூருக்கு அழைத்துச் சென்ற விமலா, தனது பணத்தை கொடுத்து விட்டுசெல்லுமாறு கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, தனது கணவரை விமலா கடத்தி சென்று விட்டதாக சுரேஷ்குமாரின் மனைவி சேலம் போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்தார்.

இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு வாழப்பாடி போலீசாருக்கு, சேலம் போலீஸ் எஸ்.பி உத்தரவிட்டார்.

இதனையடுத்து, வாழப்பாடி போலீஸார் நடத்திய விசாரணையில், போலி மந்திரவாதி சுரேஷ்குமாரும், அவரது உறவினர் சரவணனும் சேர்ந்து, விமலாவிடம் ரூ.6 லட்சம் பணம் பெற்றது தெரியவந்தது. இதனையடுத்து, சுரேஷ்குமார், சரவணன் ஆகிய இருவரும் கைது செய்த வாழப்பாடி போலீஸார் ஆத்தூர் சிறையில் அடைத்தனர்.

தோட்டத்தில் புதையல் எடுத்துக் கொடுப்பதாக கூறி, பெண்ணிடம் ரூ.6 லட்சம் பணம் பறித்த போலி மந்திரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம், வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, புதையல் எடுத்துக் கொடுப்பதாக கூறி, பணம் இருக்கும் கும்பலிடம் ஏமாறாமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என, வாழப்பாடி போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments