நடப்பாண்டில் மேட்டூர் அணை 2வது முறையாக நிரம்பியுள்ளது.
கர்நாடக மாநிலம் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
நேற்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 20, 505 கனஅடியாக இருந்த நீர் வரத்து இன்று அதிகாலை வினாடிக்கு 26,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை மீண்டும் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
மேட்டூர் அணை நிரம்பியதால் கடந்த 7ம் தேதி மூடப்பட்ட மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி மதகுகள் மீண்டும் திறக்கப்பட்டது.
உபரி நீர் கால்வாய் வழியாக வினாடிக்கு 4,500 அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 120அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இடது கரையில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத்துறை அதிகாரிகளும் பணியாளர்களும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் உடனுக்குடன் உபரி நீர் போக்கி மதகுகளை உயர்த்தி தண்ணீரை திறக்க தயார் நிலையில் பணியாளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.