முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் நடப்பது கட்சியின் அரசல்ல; இனத்தின் அரசு: மு.க. ஸ்டாலின்

அனைத்துக் கட்சியினருடனும் இணக்கமாக உள்ள ராஜ்நாத் சிங், கருணாநிதி நாணயத்தை வெளியிட சிறந்த தேர்வு.

Updated On : 18 ஆகஸ்ட் 2024, 7:41 pm IST
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து உரையாற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின்
பகிர்:

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஆக. 18) வெளியிட்டார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரும் பங்கேற்றனர்.

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா மேடையில்...
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,

Advertisement

Advertisement

’’சொல்ல முடியாத மகிழ்ச்சியின் உள்ளேன். நா நயம் மிக்க தலைவருக்கு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை நாம் கொண்டாடினோம். இன்று இந்தியாவே கருணாநிதியைக் கொண்டாடுகிறது.

கருணாநிதி நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கிண்டி பன்னோக்கு மருத்துவமனை, மதுரை நூலகத்தைக் குறிப்பிட்டார்.

கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிட என் முதல் தேர்வாக இருந்தது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்தான். பல அரசியல் மாறுமாடுகள் இருந்தாலும், அனைத்துக் கட்சியினருடனும் இணக்கமாக உள்ள ராஜ்நாத் சிங், கருணாநிதி நாணயத்தை வெளியிட சிறந்த தேர்வு.

நாணயத்தை வெளியிட ராஜ்நாத் சிங்கை அனுப்பிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.

சுதந்திர நாளன்று மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத்தந்தவர் மு. கருணாநிதி. கார்கில் போரின்போது அதிக தொகையை வசூலித்துக் கொடுத்தவர் கருணாநிதி. மத்தியில் பல திறமையான தலைவர்கள் அமையக் காரணமாக இருந்தவர்.

தமிழகத்தில் நடப்பது கட்சியின் அரசல்ல, ஒரு இனத்தின் அரசு’’ என மு.க. ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக கலைவாணர் அரங்கிற்கு வந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதல்வர் மு.க. ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்தும் அமைச்சர் துரைமுருகன் துண்டு அணிவித்தும் வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பொன்னாடைப் போர்த்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் கெளரவித்தார். நிகழ்ச்சியில் கருணாநிதி குறித்தும் அவர் கொண்டுவந்த திட்டங்கள் குறித்தும் சிறப்புக் காணொளி திரையிடப்பட்டது.

பின்னர் கருணாநிதி உருவம் பொறித்த நூற்றாண்டு நினைவு நாணயத்தை ராஜ்நாத் சிங் வெளியிட, மு.க. ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.