சென்னையின் பல்வேறு இடங்களில் இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது.
கிண்டி, பல்லாவரம், சாலிகிராமம், வடபழனி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், கோபாலபுரம், திருவல்லிக்கேணி, அடையாறு, அம்பத்தூர், தேனாம்பேட்டை, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இரவு திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
மேலும் மழைநீர் ஆங்காங்கே சாலைகளில் தேங்கியதால் பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
நேற்று (29.08.24) காலை மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று (30.08.2024) காலை 8.30 மணியளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக நிலவுகிறது.
இது மேலும் அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.