முகப்பு
தமிழ்நாடு

சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு நடத்த பேரவையில் தீர்மானம்

தனித் தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் ஸ்டாலின் உரை.

Updated On : 26 ஜூன், 2024 at 5:34 AM
பகிர்:

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக் கோரி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

இடஒதுக்கீடு மசோதா கிடப்பில் இருப்பதாகவும், சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்றும் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி திங்கள்கிழமை கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக் கோரி விரைவில் தீர்மானம் கொண்டு வரப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை சட்டப்பேரவையில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்தக் கோரி தனித் தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் கல்வி, வேலைவாய்ப்பு பெறுவதில் சம வாய்ப்பு, சம உரிமைகளையும் கொண்டவர்களாக மாற்றப்படுவதன் மூலம்தான் பொருளாதார வளர்ச்சி அடைந்த சமூகமாக மாற முடியும். அதனால் தான் இடஒதுக்கீடு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனால், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் வளர்ச்சி அடைய வழிவகை செய்து கடைபிடித்து வருகிறோம்.

சமீபகாலமாக சாதிவாரி கணக்கெடுப்புக்கான கோரிக்கை பரவலாக பேசப்படுகிறது. திராவிட அரசின் கருத்தும் அதுதான். சட்டப்படி மத்திய அரசுதான் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த முடியும். சில புள்ளி விவரங்களை மாநில அரசால் சேகரிக்க முடியாது என்பதால், மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்துவது தான் முறையாக இருக்கும்.

சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தி 2023ஆம் ஆண்டே பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளேன். மத்திய அரசு நடத்தினால்தான் சட்டரீதியாக பாதுகாப்பு இருக்கும். மாநில அரசு கணக்கெடுப்பு நடத்தி சட்டம் இயற்றினால் நீதிமன்றங்களால் ரத்து செய்ய வாய்ப்புள்ளது.” எனத் தெரிவித்தார்.

முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →