முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் 1,519 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 1,519 விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

Updated On : 6 செப்டம்பர், 2024 at 1:12 PM
கோப்புப்படம்.
பகிர்:

நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 1,519 விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சென்னை பெருநகரில், விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கும், வழிபாடுகள் செய்வதற்கும் பின்னர் அவற்றை நீர் நிலைகளில் கரைப்பதற்கும் உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும், மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தல்படியும், தீயணைப்புத் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியினரின் தடையில்லா சான்றுகளுடன் காவல்துறை அறிவித்த கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சிலைகளை நிறுவ சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ.அருண். உத்தரவின்பேரில், கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்பேரில், சென்னை பெருநகர காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு, அமைதியான முறையில் வழிபாடுகள் செய்யவும், பின்னர் காவல்துறை அறிவித்துள்ள நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கும், ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளதன்பேரில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் 1519 விநாயகர் சிலைகள் அவைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்தும், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர காவல் ரோந்து வாகனங்கள் மூலம் அவ்வப்போது போலீஸார் ரோந்து சுற்றி கண்காணித்தும் வரப்படும். இது தவிர அனைத்து விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் அமைதியான முறையில் வழிபாடுகள் செய்யவும், பொது இடங்களில் முறையான அனுமதியுடன் வைக்கப்பட உள்ள விநாயகர் சிலைகளை, காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து அமைதியான முறையில் வழிபாடுகள் செய்யவும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறும் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும் காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.