முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 1339 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது: அமைச்சர் சேகர் பாபு தகவல்

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 1339 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

Updated On : 2 பிப்ரவரி 2024, 11:55 am IST
பகிர்:


கரூர்: தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 1339 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

கரூர் மாவட்டம், மன்மங்கலம் வட்டம், திருமுக்கூடலூரில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் ரூ. 5 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை புணரமைத்து பாதுகாத்திடும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 2022-23-ஆம் நிதி ஆண்டில் 113 திருக்கோயில்கள் ரூ.154.90 கோடி மதிப்பீட்டிலும், 2023-24 நிதி ஆண்டில் 84 திருக்கோயில்கள் ரூ.149.95 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற  பின் திருப்பணிகளுக்கு மானியமாக ரூ.200 கோடி தமிழக அரசு வழங்கியுள்ளது. இதுவரை ஆயிரம் ஆண்டுகள் பழமையான 12 திருக்கோயில்கள் திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. வியாழக்கிழமை(பிப்.1) மட்டும் 13 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும் வரலாற்றில் படித்த ராஜ ராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் கோயிலுக்கான திருப்பணிகள் நடைபெற்றது போல தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது என்றார். 

இந்நிகழ்ச்சியில் கரூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சியின் 9-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர். ஸ்டீபன் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.