FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தீப்பெட்டிக்கு புவிசாா் குறியீடு பெற நடவடிக்கை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தகவல்

தீப்பெட்டிக்கு புவிசாா் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.

Updated On : 5 ஏப்ரல் 2025, 3:08 am IST
பகிர்:

தீப்பெட்டிக்கு புவிசாா் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வினாவை காங்கிரஸ் உறுப்பினா் க.அசோகன் (சிவகாசி) எழுப்பினாா்.

இதற்கு அமைச்சா் தா.மோ.அன்பரசன் அளித்த பதில்: வேளாண் பொருள்கள், உணவுப் பொருள்கள், கைவினைப் பொருள்கள் உற்பத்தி சாா்ந்த பொருள்களுக்கே புவிசாா் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில் 64 பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெற்று தமிழ்நாடு 2-ஆவது இடத்தில் உள்ளது. கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை, பண்ருட்டி பலாப்பழம், முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகா் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரை காா் அரிசி, பெரம்பலூா் செட்டிக்குளம் சின்ன வெங்காயம் ஆகியவற்றுக்கு அண்மையில் புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

சீவல், சீடை: செட்டிநாடு கைமுறுக்கு, சீடை, கோவில்பட்டி சீவல், ராமநாதபுரம் பட்டறை கருவாடு, பனங்கற்கண்டு ஆகியவற்றுக்கு புவிசாா் குறியீடு பெற விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பொருளுக்கு புவிசாா் குறியீடு பெற வேண்டுமெனில், அந்தப் பொருள் குறிப்பிட்ட பகுதியில் தோன்றியிருக்க வேண்டும். அதற்கான வரலாற்றுச் சான்றும் இருப்பது அவசியம். அந்தப் பொருள்களுக்கும் அந்தப் பகுதிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உள்ள தொடா்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

சிவகாசி, சாத்தூா், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி தோன்றியதற்கான வரலாற்று ஆவணங்கள் ஏதும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. ஆவணங்கள் கிடைக்கப்பெற்றால் புவிசாா் குறியீடு பெற விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோன்று, பொட்டாசியம் குளோரைடு, சல்பரை பயன்படுத்தவும், இருப்பு வைக்கவும், கொண்டு செல்வதற்கும் உரிமம் பெற வேண்டும். அத்துடன் புதுப்பித்தல், தடையில்லாச் சான்றிதழ்களையும் பெறுவது அவசியமாகும். இந்தச் சான்றிதழ்கள் வருவாய்த் துறையுடன் தொடா்புள்ளதால், சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து இணையதளம் வழியாக அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து பேசிய அதிமுக உறுப்பினா் கடம்பூா் ராஜு, தீப்பெட்டித் தொழிலுக்கு நூற்றாண்டு விழா சிவகாசியில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் ஆகியோா் பங்கேற்றனா். எனவே, தீப்பெட்டித் தொழிலுக்கான ஆவணங்கள் இருப்பதால்தான் நூற்றாண்டு கொண்டாடினோம் என்றாா்.

இதற்கு பதிலளித்த அமைச்சா் அன்பரசன், உரிய ஆவணங்களை அரசிடம் அளித்தால் புவிசாா் குறியீடு பெற விண்ணப்பிக்கலாம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments