தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்கள்!
தங்கையை திட்டியதால், அவரது கணவன் வீட்டிற்கு சகோதரர்கள் தீவைத்த சம்பவம்.
தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுபுளிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் வயது (35). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மீனா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சதீஷ், தற்போது ஐரோப்பாவில் வேலை பார்த்து வரும் நிலையில், இன்று(ஆக. 1) காலை தனது மனைவி மீனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடுமையாக திட்டியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனால் ஆத்திரமடைந்த மீனாவின் சகோதரர்களான வீரக்குமார் மற்றும் சிவா ஆகிய இருவரும் சதீஷின் வீட்டிற்கு சென்று அவரது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதில் வீட்டின் நிலை மற்றும் மரப்பெட்டி ஆகியவை சேதமடைந்தன. அந்த வீட்டில் சதீஷின் தந்தை ஜெகநாதன் மட்டுமே வசித்து வரும் நிலையில், பக்கத்து வீட்டில் இருந்த சதீஷின் சித்தி மல்லிகா, தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சடைந்த அவர், இது தொடர்பாக சதீஷுக்கு செல்போன் மூலம் அழைத்து தகவலைக் கூறியுள்ளார்.
இதனை அடுத்து சதீஷ், பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். போலீஸ் தரப்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்ததாகக் கூறப்பட்ட நிலையில், பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டதாக சதீஷின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்