டிச. 22ல் பியூஷ் கோயல் சென்னை வருகிறார்!? கூட்டணி முடிவு எட்டப்படுமா?
வருகிற டிச. 22ல் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வரவுள்ளதாகத் தகவல்...
தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பியூஷ் கோயல் வருகிற டிச. 22 ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் அறிவிக்கப்படவிருக்கிறது. இதையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, பிரசாரம் என அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் திமுக கூட்டணி ஓரளவு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதிமுக - பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னும் கூட்டணி முடிவு எட்டப்படாமல் இருக்கிறது. பல கட்சிகளை கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
கூட்டணியில் உள்ள அதிமுக, பாமகவில் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. கூட்டணியில் இருந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் விலகியுள்ள நிலையில் அவர்களை மீண்டும் சேர்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பாமகவில் ராமதாஸ், அன்புமணிக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. தேமுதிகவும் வருகிற ஜனவரியில்தான் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல்வேறு சிக்கல்கள் நிலவும் சூழ்நிலையில்தான் தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே கட்சி, கூட்டணி சார்ந்த விவகாரங்களில் பல்வேறு பிரச்னைகளைக் கையாண்டவர் என்ற முறையில் அவரை பொறுப்பாளராக நியமித்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்துப் பேச பியூஷ் கோயல் விரைவில் தமிழகம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வருகிற டிச. 22 ஆம் தேதி அவர் சென்னை வரவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை வரும் பியூஷ் கோயல், முதலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே சென்னையில் தனியார் ஹோட்டலில் இன்று(டிச. 17) பாஜகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். தேர்தல் பணிகள், பாஜக தலைவர்கள் தமிழகம் வருகை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.
பிரதமர் மோடி, பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி மாதம் தமிழகம் வரவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கட்சிகளை இணைக்கும் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sources said TN Election BJP Incharge Piyush Goyal to visit Chennai on Dec 22
இதையும் படிக்க | தில்லி காற்று மாசு: அரசு, தனியார் அலுவலகங்களுக்கு முக்கிய உத்தரவு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.