நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை!
சீ ஷெல் உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது பற்றி...
நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான சீ ஷெல் உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
துபையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் உணவகத்தின் கிளைகளை சென்னையில் பல்வேறு இடங்களில் நடிகர் ஆர்யா நடத்தி வருவதாக கூறப்பட்டது.
சென்னை அண்ணா நகர், வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட 5 இடங்களில் இந்த உணவகத்தின் கிளைகள் இருக்கின்றன.
இந்த உணவகங்களில் முதலீடு செய்யப்பட்ட பணத்தில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதனடிப்படையில், சென்னை அண்ணா நகரில் உள்ள சீ ஷெல் உணவகத்துக்கு இன்று காலை வருகைதந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்,
அதேபோல், வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட கிளைகளிலும் 8 குழுக்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் பிரிந்து சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, சீ ஷெல் உணவகத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று நடிகர் ஆர்யா மறுப்பு தெரிவித்துள்ளார்.