பல்லடம்: விஷவாயு தாக்கி பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு!
விஷ வாயு தாக்கி பலியானோர் குறித்து...
பல்லடம் அருகே சாய ஆலையில் சாயக்கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியாருக்குச் சொந்தான சாய ஆலை உள்ளது. இந்த ஆலையில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திங்கள்கிழமை வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சுமார் 7 அடி ஆழமுள்ள சாயக்கழிவு நீர்த்தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே, திடீரென விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளர்களும் மயக்கம் அடைந்தனர்.
Advertisement
இதையடுத்து, அங்கிருந்த எஞ்சிய தொழிலாளர்கள் அவர்களை மீட்டு, திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோ மூலமாக கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுண்டமேட்டை சேர்ந்த சரவணன் (30), வேணுகோபால் (31) ஆகியோர் பலியாகினர்.
மேலும், சுண்டமேட்டைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன், சின்னசாமி ஆகிய 2 பேரும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில், ஹரிகிருஷ்ணன் என்பவரும் சிகிச்சை பலனின்றி இன்று(மே 20) பலியானார். இதனால் பல்லடத்தில் விஷவாயு தாக்கி பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க: தமிழகத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை!