சேலம் : தன்னைக் கொலை செய்ய திட்டமிட்டு ஆள்களை அனுப்பிய அன்புமணியின் அனைத்து விஷயங்களையும் வெளியே கொண்டு வருவேன் என பாமக எம்எல்ஏ அருள் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இணைச் செயலரும் சட்டமன்ற உறுப்பினருமான அருள் இன்று வாழப்பாடி பகுதியில் கட்சி நிர்வாகி இல்லத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வரும்போது அன்புமணி ஆதரவாளர்கள் அவரது கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்.
இதனால் ராமதாஸ் ஆதரவாளர்களுக்கும் அன்புமணி ஆதரவாளர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் உருட்டுக்கட்டைகளைக் கொண்டு தாக்கிக் கொண்டனர்.
இது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காயமடைந்த ராமதாஸ் ஆதரவாளர்கள் ஏழு பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களை சட்டமன்ற உறுப்பினர் அருள் நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அருள், அன்புமணியின் தூண்டுதல் பெயரில் தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும் தன்னை தொண்டர்கள் காப்பாற்றியதாகவும் சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் மிகப் பிரமாண்ட முறையில் ராமதாஸுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத அன்புமணி தன்னை கொலை செய்யுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில் இன்று என் மீது கொலை முயற்சி தாக்குதல் நடைபெற்றது.
தொண்டர்கள் என்னை காப்பாற்றினர். இதில் ஏழு பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என காவல்துறையில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் நடவடிக்கை இல்லையெனில் போராட வேண்டியதை தவிர வேறு வழியில்லை என்றும் அன்புமணியின் ஆதரவாளர்களின் இந்த அராஜகம் தொடர்ந்தால் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றும் எச்சரித்தார்.
அன்புமணி உடன் இருந்தவன் நான், அவர் என்னென்ன செய்தார். கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் எப்படி ஈடுபட்டார்? அவருடன் இருந்தவர்கள் எப்படி கொல்லப்பட்டனர்? உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விரிவாக வெளியில் எடுத்துரைப்பேன் என்றும் ஆள்களை அனுப்பி என்னைக் கொலை செய்ய முயற்சி செய்தால் இதைக் கண்டு பயப்பட மாட்டேன் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிக்க... வீரப்பன் தேடுதல் வேட்டை: இழப்பீடு தொகை அரசு பணம் அல்ல; மக்கள் பணம்: உயர் நீதிமன்றம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.