ஆம்பூர் அருகே நண்பர்களுடன் மலட்டாற்றில் குளிக்கச் சென்ற போது ஆற்றில் தவறி விழுந்து இளைஞர் பலியானார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சுற்று வட்டார பகுதிகளிலும் தமிழக ஆந்திர எல்லை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சிலநாள்களாக பெய்து வரும் கனமழையால் பாலாறு மற்றும் மலட்டாற்றில் வெள்ள நீர் சென்றுகொண்டிருக்கிறது.
இந்தநிலையில் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு பகுதியில் செல்லும் மலட்டாற்றில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் வெள்ள நீரில் குளித்து வருகின்றனர்.
இன்று மலட்டாற்றில் செல்லும் வெள்ள நீரில் நண்பர்களுடன் குளிக்கச்சென்றபோது சின்னவரிகம் பகுதியைச் சேர்ந்த குப்பன் மகன் விக்ரம் (25) ஆற்றில் தவறி விழுந்துள்ளார்.
அப்போது உடன் சென்ற நண்பர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவல்அறிந்த உமராபாத் போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனடையே துறை சார்ந்த அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச்சரிக்கை பலகை வைத்து வெள்ள நீர் செல்லும் பகுதிகளில் தடை விதிக்க தவறியதே இளைஞர்கள் இறப்புக்கு காரணம் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.