வடகிழக்குப் பருவமழை காரணமாக நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை இந்த மாதம் பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாயவிலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் 2025 மாதத்திற்குரிய அரிசியை அக்டோபர் 2025 மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் அர.சக்கரபாணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாட்டின் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தில் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமையுடன் சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை அனைத்து நியாயவிலைக் கடைகளின் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, வடகிழக்குப் பருவமழை காலத்தில் மழை அதிகம் பெய்யலாம் என்பதைக் கருத்தில் கொண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதார்கள் தங்களுடைய நவம்பர் 2025 மாதத்திற்குரிய அரிசியை மட்டும் அக்டோபர் 2025 மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.
அதாவது அக்டோபர் மாத ஒதுக்கீடான 12 – 35 கிலோ அரிசியை ஏற்கனவே பெற்றவர்களும் அக்டோபர் மாத அரிசி ஒதுக்கீட்டை இதுவரை பெறாதவர்களும் நவம்பர் மாத ஒதுக்கீடான 12 – 35 கிலோ அரிசியை இம்மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.
நவம்பர் 2025 மாத அரிசியை அக்டோபர் 2025 மாதத்தில் பெறாதவர்கள், வழக்கம்போல் நவம்பர் மாதத்தில் தங்களுக்குரிய அரிசியினைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.